அம்பாறை மாவட்டம் பொத்துவில் – அருகம்பை பகுதிக்கு சுற்றுலா வருகை தந்த நியூசிலாந்தைச் சேர்ந்த இளம் சுற்றுலாப் பயணிகள் இருவர், அப்பகுதியின் இஸ்லாமிய கலாச்சாரத்தை மதிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்து மகிழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அருகம்பையில் ‘மொரிட்டா அட்வென்ச்சர்ஸ்’ (Morita Adventures) என்ற சுற்றுலா சேவையை நடத்தி வரும் தஸ்லிம் என்பவரின் வழிகாட்டலில் குறித்த சுற்றுலாப் பயணிகள் கடல் பயணம் மேற்கொண்டு தமது பொழுதை மகிழ்ச்சியாகக் கழித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தஸ்லிமின் வீட்டிற்கு விஜயம் செய்த அவர்கள், அவரது குடும்பத்தினரின் விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டு, குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டுள்ளனர்.
இதன்போது பொத்துவில் மக்களின் அன்றாட வாழ்க்கை முறை மற்றும் கலாச்சார நடைமுறைகளை ஆர்வத்துடன் அவதானித்த குறித்த இளம் பெண்கள், அப்பகுதியின் இஸ்லாமிய கலாச்சாரத்தின் மீது ஏற்பட்ட விருப்பத்தின் காரணமாக ஹிஜாப் அணிய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஹிஜாப் ஆடையைப் பெற்றுக்கொண்ட அவர்கள் அதனை அணிந்து புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
அருகம்பைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா சேவைகளை வழங்குவதுடன், பிராந்தியத்தின் தனித்துவமான கலாச்சாரம், விருந்தோம்பல் மற்றும் நற்பண்புகளையும் அறிமுகப்படுத்தும் வகையில் தஸ்லிம் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் மக்களின் கலாச்சாரத்தை அறிந்துகொண்டு அதனை மதிக்கும் இத்தகைய நிகழ்வுகள், கலாச்சார பரிமாற்றத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றன.

