நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட சாமிமலை பகுதியில் இருந்து மஸ்கெலியா நகருக்குச் செல்லும் முறையான பாடசாலை பேருந்து சேவை இல்லாததால், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அன்றாட பணிகளுக்காக நகருக்குச் செல்வோர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
சாமிமலை பகுதியில் இருந்து தினமும் 500க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் மஸ்கெலியா மற்றும் புளூம்பீல்ட் உள்ளிட்ட பாடசாலைகளுக்குச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், காலை 6 மணி முதல் 8 மணி வரையான காலப்பகுதியில் ஒரு அரச பேருந்தும், ஒரு தனியார் பேருந்தும் சேவையில் ஈடுபட்டு வந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், கடந்த மூன்று தினங்களாக காலை 7 மணிக்கு சேவையில் ஈடுபட்டு வந்த அரச பேருந்து சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் உரிய நேரத்தில் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், பேருந்துகளில் அதிகளவு நெரிசல் காரணமாக சில மாணவர்கள் பேருந்தின் மிதிபலகையில் பயணிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாடசாலை மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு நவீன போக்குவரத்து சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மலையகப் பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பையும் நலனையும் கருத்திற்கொண்டு முறையான பேருந்து சேவையை ஏற்படுத்துவதற்கு பொறுப்பு வாய்ந்த தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாமிமலை பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

