இலங்கை–இந்திய கடல் எல்லையை அண்மித்த பகுதியில், இலங்கைப் படகு ஒன்றிலிருந்து இந்தியப் படகிற்கு சில உடமைகள் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்திய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழகத்தின் கோட்டைப்பட்டினத்திற்கு எதிரே கடற்பரப்பில் இரு படகுகள் நீண்ட நேரமாக ஒன்றுடன் ஒன்று நின்றிருந்ததை அவதானித்த சிலர், அந்த இரு படகுகளின் இலக்கங்களையும் மரையன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கரையில் காத்திருந்த மரையன் பொலிஸார், குறித்த இந்தியப் படகு கரைக்கு திரும்பியதும் அதனைக் கைப்பற்றி சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இலங்கைப் படகில் இருந்து இந்தியப் படகிற்கு நடுக்கடலில் பொருட்கள் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் தகவலின் அடிப்படையில், குறித்த படகில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் தொடர்பில் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கைப் படகு மற்றும் அதில் இருந்தவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

