வஹல்கட காவல்துறை பிரிவிற்குட்பட்ட வெலிவெவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எருமையுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக வஹல்கட காவல்துறையினர் தெரிவித்தனர்.
கஹட்டகொல்லேவ, கெபிதிகொல்லாவ பிரதேசத்தில் வசித்து வந்த விபுல சேனாவின் நிமேஷ் ருக்சான் ரட்சர என்ற 23 வயதுடைய திருமணமான இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதி
விபத்தின் போது காயமடைந்தவரை மீட்டு வவுனியா(vavuniya) பொது வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கஹடகொல்லாவ பதவிய நகரில் இருந்து தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது வீதியின் குறுக்கே வந்த எருமை மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் எருமை ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக வஹல்கட காவல்துறையிர் தெரிவித்தனர்.
மனைவியும் கர்ப்பம் உயிரிழந்த எருமையும் கர்ப்பம்
விபத்தில் உயிரிழந்த நிமேஷ் ருக்சான் ரட்சரவின் மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும், விபத்தில் உயிரிழந்த எருமையும் கர்ப்பமாக உள்ளதாகவும் வஹல்கட காவல்துறையினர்மேலும் தெரிவித்தனர்.
பதவிய மற்றும் கஹடகொல்லேவ பிரதான வீதியில் இரவு நேரங்களில் மாடுகள் மற்றும் எருமை மாடுகள் நடமாடுவதால், அவற்றைச் சேர்ந்த கால்நடை உரிமையாளர்களுக்கு உடனடியாக அறிவித்து விபத்துக்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வஹல்கட காவல் நிலையபொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் டபிள்யூ.ஏ.ஏ.சம்பத் தெரிவித்தார்.