திருகோணமலை சம்பவத்தில் பௌத்த மதகுருமார்களுக்கு காவல்துறையினர் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துமாறு காவல்துறை மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பலாங்கொடை காசியப்ப தேரர் தெரிவித்துள்ளார்.
காவல்துறை தலைமையகத்திற்கு நேற்று (24.11.2025) திருகோணமலை விகாரையின் தலைமை தேரரும் முறைப்பாடு செய்வதற்கு வந்திருந்தார்.
மேலும் நேற்று (24.11.2025) நீதிமன்றம் காசியப்ப தேரருக்கு மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணையும் அனுப்பியிருந்தது.
விரிவான விசாரணை
இது தொடர்பில் தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது,

“அன்றைய சம்பவத்தில் காவல்துறையினர் தேரர்களை தாக்கி புத்தர் சிலையை எடுத்து சென்றது தேவையற்ற செயற்பாடாகும்.
எங்களை தாக்கியமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதே எமது நோக்கமாகும்.
காவல்துறையின் உயர் அதிகாரிகளின் பணிப்பின் பேரிலேயே இது நடந்திருக்கலாம் என நினைப்பதோடு ஏதே ஒரு அரசியல் அழுத்தமும் இருப்பதாகவே தோன்றுகிறது.
பௌத்த அறநெறி பாடசாலை
திருகோணமலையில் முதல் பௌத்த அறநெறி பாடசாலையை ஆரம்பிக்கவே நாம் அங்கு சென்றோம். இப்படி நடக்கும் என தெரிந்து கொண்டு செல்லவில்லை.
இனவாத பிரச்சினை ஒன்றும் அங்கிருக்கவில்லை. எந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எங்களுக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
காவல்துறையினரே எங்களுக்கு தாக்குதல் நடத்தினர். ஒரு தமிழ் காவல்துறை அதிகாரியும் இருக்கவில்லை
.அதனால் இனவாத பிரச்சினை ஒன்று இருந்ததாக எமக்கு தெரியவில்லை. எந்த கோணத்தில் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.
இனவாத செயற்பாடு நடந்திருந்தால் இரு தரப்பினர் இரு இனங்கள் அங்கு இருந்திருக்க வேண்டும். அப்படியான சந்தர்ப்பம் ஏற்படவில்லை” என கூறியுள்ளார்.

