எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து மான் சின்னத்திலேயே போட்டியிட தீர்மானித்துள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அழைத்ததன் பேரில் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது பற்றி எமது கட்சியால் ஆராயப்பட்டது.
பொது சின்னம்
முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கூட்டாக தேர்தலில் போட்டியிட்ட போது சில மாவட்டங்களில் யானை சின்னத்திலும் (ஐ.தே.கட்சியின் தேர்தல் சின்னம்) வேறு சில மாவட்டங்களில் தாமரை மொட்டு சின்னத்திலும் (ஸ்ரீ.பொ.பெ யின் தேர்தல் சின்னம்) இன்னும் சிலவற்றில் பொது சின்னமொன்றிலும் போட்டியிட முடிவெடுத்தன.
அது போல் எமது தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் ஒரு போட்டி தவிர்க்கும் ஏற்பாட்டினை எட்ட முடியுமா என்று ஆராயப்பட்டது. எனினும் அவ்வாறான ஏற்பாட்டுக்கு இடம் இல்லை என்று தெரியவந்தது.
தமிழ்த் தேசிய நலனின் அடிப்படையிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அட்சர கணித முறையின் அடிப்படையிலும் தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து மான் சின்னத்திலேயே போட்டியிடும் என்ற முடிவுக்கு வந்திருப்பதை மக்களுக்கு இத்தால் அறியத் தருகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.