செங்கலடி பதுளை வீதி கித்துள் பகுதியில் உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் உயிரிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று(13.11) பிற்பகல் இடம்பெற்றுள்ள நிலையில், உழவு இயந்திர சாரதியை கைது செய்துள்ளதாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் கரடியனாறு இராயபுரத்தைச் சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரபாகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
தனியார் பஸ் சாரதியான குறித்த நபர் சம்பவ தினமான நேற்று மாலை 6.30 மணியளவில் உறுகாமத்திலுள்ள பேருந்து வண்டி உரிமையாளரின் வீட்டில் பேருந்து வண்டியை கொண்டு சென்று நிறுத்திவிட்டு கடமையை முடித்து கொண்டு இராஜபுரத்திலுள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் பிரயாணித்து கொண்டிருந்தார்.

அப்போது மரப்பாலத்தில் இருந்து கித்துள் நோக்கி பிரயாணித்த உழவு இயந்திரமும் கித்துள் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற சாரதி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உழவு இயந்திர சாரதியை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

