அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் போட்டிப் பரீட்சையின்போது வேலையற்ற பட்டதாரிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர விமர்சித்துள்ளார்.
அரசாங்கப் பாடசாலைகளுக்கு 23,000 ஆசிரியர்களை நியமிப்பதற்காக சமீபத்தில் நடைபெற்ற ஆசிரியர் போட்டிப் பரீட்சையில், சமநிலையற்ற நிலை ஏற்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர சுட்டிக்சாட்டியுள்ளார்.
பரீட்சையில் இழைக்கப்பட்ட அநீதி
குறித்த போட்டிப் பரீட்சையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வேலையில்லாத பட்டதாரிகள் உட்பட ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பரீட்சையில் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும், இந்தத் தேர்வின் மூலம் ஆசிரியர் பணிக்கு இருபத்து மூவாயிரம் பேர் மட்டுமே நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிப் பரீட்சைகளில் பங்கேற்ற அனைவருக்கும் ஒரே வினாத்தாள் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை பரீட்சையில் அபிவிருத்தி உத்தியோத்தர்களுக்கு ஒரு வினாத்தாளும், பட்டதாரிகளுக்கு மற்றொரு வினாத்தாளும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் உள்ள சில கேள்விகள் பதிலளிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தபோதிலும், அபிவிருத்தி உத்தியேகாத்தர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் எளிதில் தீர்க்கக்கூடிய பல கேள்விகள் இருந்ததாக தயாசிறி ஜயசேகர தொடர்ந்தும் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த காலத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நடத்திய போராட்டம், ஜனாதிபதி தலையிட்டுப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் நிறுத்தப்பட்டதால், அவர்களுக்குச் சற்று நிவாரணம் அளிக்கும் நோக்கில் இலகுவான முறையில் ஆசிரியர் போட்டிப் பரீட்சை வினாத்தாள் வழங்கப்பட்டதா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனைத்துத் பரீட்சார்த்திகளையும் சமமாக நடத்த வேண்டும் என்றாலும், ஒரே பரீட்சைக்கு இரண்டு வினாத்தாள்களை வழங்குவது வேலையில்லாத பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும் என்றும் தயாசிறி ஜயசேகர தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

