கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஹிமிகம(உரிமை) திட்டத்தின் இலவச
காணி பத்திரம் வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(13.08.2025) புதன்கிழமை
காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் “வளமான
நாடு – அழகிய வாழ்வு” எனும் தொனிப்பொருளில் கமத்தொழில், கால்நடை வளங்கள்,
காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு
ஆகியவற்றின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இலவச காணி பத்திரங்கள்
இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில்
300 இலவச காணி பத்திரங்களும், யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலாளர்
பிரிவில் 32 இலவச காணி பத்திரங்களுமாக மொத்தமாக 332 பயனாளிகளுக்கு இலவச காணி
பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் குறித்த திட்டத்தின் முதலாவது நிகழ்வாக இன்றைய நிகழ்வு அமைந்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்
கே.டீ. லால்காந்த, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ் –
கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான இ.சந்திரசேகரன்,
காணி மற்றும் நீர்ப்பாசனப் பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க, யாழ் –
கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், வடக்கு மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே. நிஹால்,
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
அதிபர் ம.பிரதீபன், சர்வமத தலைவர்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின்
அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பச்சிலைப்பள்ளி
மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர் மற்றும்
உறுப்பினர்கள், துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள்,
கிராம சேவகர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.