இஸ்ரேல் (Israel) – ஹமாஸ் (Hamas) இடையிலான போர் நிறுத்த நடவடிக்கையில், அடுத்த நகர்வாக மூன்று இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், சனிக்கிழமையன்று மூன்று இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
ஹமாஸின் ஆயுதப் பிரிவு செய்தித் தொடர்பாளர் அபு உபைதா டெலிகிராம் மூலம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஓஃபர் கால்டரோன்(Ofer Kalderon), கீத் சாமுவேல் சீகல் (Keith Samuel Siegel) மற்றும் யார்டென் பிபாஸ்(Yarden Bibas) ஆகியோர் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்தீனிய கைதி
காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் பிடியில் வைக்கப்பட்டிருந்த மூன்று இஸ்ரேலியர்கள் மற்றும் ஐந்து தாய்லாந்து நாட்டினர் உட்பட எட்டு பிணைக் கைதிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர்.

பிணைக் கைதிகள் பரிமாற்ற நிகழ்வின் போது குழப்பகரமானதாக இருந்தது என்றும், கூட்டத்தினர் சில பகுதிகளை முற்றுகையிட்டதால், இஸ்ரேல் பதிலுக்கு 110 பலஸ்தீனிய கைதிகளை விடுவிப்பதை தற்காலிகமாக ஒத்தி வைத்தது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஆரம்ப கட்டத்தின் கீழ், ஹமாஸ் ஆறு வார காலப்பகுதியில் மொத்தம் 33 பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும்,
அதே நேரத்தில் இஸ்ரேல் 737 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிணைக் கைதிகள்
சனிக்கிழமையன்று விடுவிக்கப்படவுள்ள மூன்று பணயக் கைதிகளும் அக்டோபர் 7, 2023 அன்று நடந்த தாக்குதல்களில் சிறைபிடிக்கப்பட்டவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

35 வயதான யார்டென் பிபாஸ், அவரது மனைவி ஷிரி பாபாஸ் மற்றும் அவர்களது இரண்டு இளம் குழந்தைகள் ஆகியோருடன் கடத்தப்பட்டார்.
இந்தநிலையில், தற்போது யார்டென் மட்டுமே அவரது குடும்பத்தில் உயிருடன் உள்ள நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/hamas-releases-important-statement-hostage-release-1738344867

