இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கான பற்றாக்குறை, இம்மாத இறுதி அல்லது அடுத்த மாத நடுப்பகுதி வரை தொடருமென நுகர்வோர் விவகார அதிகாரசபை (Consumer Affairs Authority) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடியதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
எனினும், தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்பட மாட்டாதென தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை (Coconut Development Authority) தெரிவித்துள்ளது.
எண்ணெய் ஏற்றுமதி
தேங்காய் எண்ணெய் கொண்டு வருவதற்கான கொள்கலன் பற்றாக்குறை மற்றும் கப்பல் போக்குவரத்தின் தாமதம் என்பன இந்த நிலைமைக்கு காரணமென குறித்த அதிகாரி கூறியுள்ளார்.

அது மாத்திரமன்றி இலங்கைக்கு தேங்காய் எண்ணெய் ஏற்றுமதியில் ஈடுபட்ட பிலிப்பைன்ஸ் நிறுவனம் மூடப்பட்டுள்ளமையும் இதற்கான காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமை தொடர்பான முழுமையான அறிக்கையை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
தேங்காய் சிரட்டைகளை ஏற்றுமதி
இதேவேளை, தேங்காய் சிரட்டைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் வருடத்திற்கு 300 மில்லியன் டொலர் வருமானம் நாட்டிற்கு கிடைக்கப்பெறுவதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து தேங்காய் சிரட்டைகளில் இருந்து கரி உற்பத்தி செய்யப்பட்டு கார்பனாக ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
தேங்காய் சிரட்டைகள் பெரும்பாலும் அமெரிக்காவிற்கு (USA) ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source: https://ibctamil.com/article/import-coconut-oil-price-in-srilanka-1719275787

