கொழும்பில் உள்ள ஒரு முன்னணி மகளிர் பாடசாலையில் மாணவி ஒருவரை கடத்தும் முயற்சி இடம்பெற்றுள்ளது.
மகளிர் பாடசாலைக்கு முன்பாக ஒரு நபரின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை பாடசாலை நிர்வாகம் உன்னிப்பாக அவதானித்துள்ளது.
இது தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக குருந்துவத்த பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தல் முயற்சி
இந்த சம்பவம் நேற்று மதியம் பாடசாலை நேரத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. நேற்று, அந்த பாடசாலையில் இருந்து ஒரு மாணவியை அழைத்துச் செல்ல அவருடைய தாயார் காரில் வந்திருந்தார்.

அவர் தனது மகளை காரின் பின் இருக்கையில் அமர வைத்தபோது, வெளியாள் ஒருவர் வலுக்கட்டாயமாக காரின் பின் இருக்கையில் ஏறியதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அவர் காரை முன்னோக்கி ஓட்டுமாறு கட்டாயப்படுத்தினார். அந்த நேரத்தில் மாணவியின் தாய் காரில் இருந்து இறங்கி அருகில் இருந்தவர்களிடம் உதவி கோரியுள்ளார்.
பாடசாலையின் பாதுகாப்பு பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகைத்தந்துள்ளனர். இதன் போது சந்தேக நபர் காரில் இருந்து தப்பி சென்றதாக தெரியவந்துள்ளது.
ஆயுதத்தால் மிரட்டல்
சம்பவ இடத்தில் கூர்மையான ஆயுதத்தைக் காட்டி, அருகில் கூடியிருந்த கூட்டத்தினரையும் அந்த நபர் அச்சுறுத்தியுள்ளார்.

இந்த விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ள பாடசாலை நிர்வாகம், தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல வரும்போது பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது
பாதுகாப்பு கமராக்களை சோதனையிட்ட போது குறித்த நபர் பல நாட்களாக பாடசாலை பகுதியில் சுற்றித் திரிந்தமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Source: https://tamilwin.com/article/man-tried-to-kidnap-in-student-in-colombo-1746272738

