இலங்கைக்கு பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் உதவிகள் இலங்கையின் பின்தங்கிய பெருந்தோட்ட மக்களுக்கு கிடைப்பதை உறுதிபடுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கான பிரான்சிய தூதுவர் ஜோன் பிரான்கொயிஸ் பெசட்டுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரான்சிய தூதுவர் ஜோன் பிரான்கொயிஸ் இல்லத்தில் பிரான்சிய விருந்துபசாரத்துடன் கூடிய பயனுள்ள சந்திப்பு நிகழ்ந்தது.
விசேட பேச்சுவார்த்தை
தெற்கு உலக நாடுகள் தொடர்பில் பங்களிப்புகளை வழங்க பிரான்ஸ் இன்று உறுதியாக இருப்பது என்னை கவருகிறது.

ஜனாதிபதிகள் மெக்ரோன், விக்ரமசிங்க ஆகியோர் மத்தியிலான பேச்சுவார்த்தைகளின் பின் இலங்கைக்கு சமுத்திரதுறை தொடர்பில் உதவ பிரான்ஸ் ஆர்வம் கொண்டுள்ளதாக தூதுவர் மற்றும் தூதரக துணை தலைமை அதிகாரி ஆகியோர் என்னிடம் கூறினர்.
பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் உதவிகள் இலங்கையில் தமிழ் மக்களுக்கும், பின்தங்கிய பெருந்தோட்ட மக்களுக்கும் கிடைப்பதை உறுதி படுத்துமாறு நான் கோரினேன்.
நமது மக்கள் தொடர்பில் விசேட வேலைத்திட்டங்களை முன்மொழிந்து முன்னெடுப்பது தொடர்பில் தொடர்ந்து பேச்சுகள் நடத்துவது பற்றியும் கலந்துரையாடினோம்” என கூறியுள்ளார்.
Source: https://tamilwin.com/article/manoganesan-met-the-french-ambassador-1714731084

