வடக்கில் எங்கு பார்த்தாலும் இராணுவ முகாமை அவதானிக்கும் நிலையில்
தெற்கில் இந்த நிலைமை வேறு விதமாக உள்ளதாகவும் அதிக படியான இராணுவப்பிரசன்னத்தை
குறைக்க வலியுறுத்தி எதிர்வரும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவை
வழங்குவதாக வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு நாம்
முழுமையான ஆதரவினை வழங்குகின்றோம்.
கடையடைப்பிற்கு முழுமையான ஆதரவு
நாட்டில் உள்ள ஏனைய ஏழு மாகானங்களை விட
வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னம் அதிகமாக இருக்கிறது.
எனவே வடகிழக்கில் உள்ள இராணுவத்தை குறைத்து அனைத்து மாகாணங்களுக்கும் சமமான
அளவில் பங்கிடப்படவேண்டும்.
எமது மக்களின் காணிகளை இராணுவம்
விடுவிக்கவேண்டும்.
தற்போதுகூட வவுனியா விமானப்படை முகாமுக்காக சகாயமாதா புரத்திற்கு பின்புறமுள்ள
8 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படவுள்ளது.

ஆனால் அந்த கிராமத்தில் விளையாட்டு
மைதானம் ஒன்றுகூட இல்லை. இறம்பைக்குளம் கிராமத்தில் பொதுத்தேவைக்கான காணி
இல்லை. அந்தபகுதியில் உள்ள மயானத்திற்கான நிலம் போதுமானதாக இல்லை. எனவே இப்படியான ஒரு நிலை இருக்கும் போது இந்த காணி சுவீகரிப்பை எப்படி
அனுமதிக்க முடியும்.
எமது பகுதிகளில் கிராமங்களுக்கு ஒரு இராணுவ முகாம் ஒன்று கட்டாயம் இருக்கும்
நிலை உள்ளது. ஆனால் தெற்கில் அவ்வாறு இல்லை. எனவே இவ்வாறான நிலமைகள்
மாற்றப்படவேண்டும் என வலியுறும்தி நாம் இந்த கடையடைப்பிற்கு முழுமையான ஆதரவினை
வழங்குகின்றோம்” என்றார்

