வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், உள்ளூராட்சி மன்றங்களின்
செயலாளர்களுக்கும் இடையிலான மார்ச் மாதத்துக்கான கலந்துரையாடல் ஆளுநர்
செயலகத்தில் நேற்று மாலை (29.03.2025) இடம்பெற்றது.
இதன்போது
பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு முக்கிய முடிவுகள்
எட்டப்பட்டன.
உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடன் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற
கூட்டத்தில், சுற்றுச்சூழல் பொலிஸார், விலை மதிப்பீட்டுத் திணைக்களம், நகர
அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிநிதிகளை அடுத்த கூட்டத்துக்கு அழைக்கவேண்டும்
என கோரிக்கை விடுக்கப்பட்டது.
மக்களின் தேவைகள்..
இதற்கு அமைவாக இந்தக் கூட்டத்தில் தொடர்புடைய தரப்புக்களின்
பிரதிநிதிகள் பங்குபற்றினர்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், “உள்ளூராட்சி
மன்றங்களுடன் தொடர்புடைய சிறிய தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாது மக்கள் என்னை
வந்து சந்திக்கின்றனர்.

அந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். உள்ளூராட்சி
மன்றங்கள் மக்களுக்காகவே இருக்கின்றன. சேவையை சிறப்பாக செய்யுங்கள்” எனக்
குறிப்பிட்டார்.
மேலும், உள்ளூராட்சி மன்றங்கள் கடைகளுக்கான வைப்புப் பணத்தொகையை உயர்வாக
நிர்ணயித்துள்ளமை தொடர்பாக பல்வேறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்
கூட்டங்களில் சுட்டிக்காட்டப்பட்டமை மற்றும் ஆளுநருக்கு இது தொடர்பில்
தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.














