முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏ.சி.பாம் கிராமமக்களை மீள்குடியமர்த்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
ஒட்டுசுட்டான் – தண்டுவான்
கிராமத்திற்கு அண்மையிலுள்ள ஏ.சி பாம் என்னும் பூர்வீகத் தமிழ் கிராமத்திலுள்ள
மக்கள் இடம்பெயர்ந்து 28 ஆண்டுகளாகியுள்ள போதும் இதுவரையில்
மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.
அதாவது கடந்த 1997ஆம் ஆண்டு அப்பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்த சுமார்
46 குடும்பங்களைச் சேர்ந்த தமிழ் குடும்பங்கள் யுத்தம் காரணமாக தமது
வாழிடங்களிலிருந்து இடம்பெயர்ந்தனர்.
வர்த்தமானி அறிவிப்பு
இந்நிலையில், தற்போது வரையில் குறித்த ஏ.சிபாம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்மக்கள்
மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.
இருப்பினும் குறித்த கிராமத்தில் மக்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்கள்
காணப்படுகின்றன.

அந்தவகையில் சிதைவடைந்த நிலையில் மக்கள் வாழ்ந்த வீடுகள்
காணப்படுவதுடன், வேலிகளுக்காக நடப்பட்ட சீமைக்கிழுவை மரங்களும், மாமரம், தோடை
உள்ளிட்ட பலன்தரு மரங்கள் பலவும் தற்போதும் காணப்படுகின்றன.
இத்தகைய சூழலில் கடந்த 2012ஆம் ஆண்டு குறித்த ஏ.சி பாம் கிராமம் தண்டுவான்
ஒதுக்கக்காட்டுப்பகுதியாக வர்த்தமானிமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,
வனவளத்திணைக்களம் குறித்த பகுதியை ஆக்கிரமித்துள்ளது.
இந்நிலையில் தங்களுடைய பூர்வீக வாழிடத்தில் மீள்குடியேற்றுமாறு இக்கிராமக்கள்
தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த மக்களை அவர்களது சொந்த இடமான ஏ.சி பாம் கிராமத்தில் மீள்குடியேற்றுமாறு
தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏ.சி.பாம், தண்ணிமுறிப்பு ஆகிய தமிழ்மக்களின் பூர்வீக வாழ்விடங்களில் அந்த
மக்களை மீளக்குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.

