காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு
ஆகியவற்றுக்கு எதிராக மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய
தினம் (16) 14 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது.
மன்னார் (Mannar) நகர சுற்றுவட்ட பகுதியில் குறித்த போராட்டமானது இடம்பெற்று வருகிறது.
மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற
போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் இன்றைய தினம் (16) வங்காலை
மற்றும் தலைமன்னார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள்
குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம்
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தலையில் கறுப்பு பட்டி அணிந்து
போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை
ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல்
மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம்
தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





