ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி நவம்பரில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டலால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடுகளில் ஒன்றாக ரஷ்யா திகழ்ந்து வருகின்றது.
எண்ணெய் கொள்முதல்
பிற நாடுகளைக் காட்டிலும், விலை குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்ய உலக நாடுகள் போட்டி போட்டு வந்தன.

இருப்பினும் உக்ரைன் போர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்து வரும் அமெரிக்கா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்யும் இந்தியா போன்ற நாடுகளுக்கு கூடுதல் வரிகளை விதித்தது.
இந்தநிலையில், நவம்பர் மாதத்தில் ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய எண்ணெய்
இதனடிப்படையில், நாளொன்றுக்கு நான்கு லட்சத்து 20 ஆயிரம் பீப்பாய்கள் குறைந்து 69 லட்சம் பீப்பாய்கள் விற்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, ரஷ்யாவின் எண்ணெய் வருவாய் நவம்பர் மாதத்தில் 99 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 32 ஆயிரம் கோடி ரூபாய் குறைவு என குறிப்பிடப்பட்டுள்ளது.
எண்ணெய் விற்பனை
இந்தநிலையில், வரிவிதிப்புகள் மற்றும் தடைகள் போன்ற அமெரிக்காவின் மிரட்டல்களால் ரஷ்யா எண்ணெய் கொள்முதலில் பிற நாடுகள் ஆர்வம் காட்டவில்லை என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ரஷ்ய நிதியமைச்சகம் கருத்து தெரிவிக்கையில், “இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய் 22 சதவீதம் குறைந்துள்ளது.

இதன் மொத்த மதிப்பு 88 பில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது” என தெரிவித்துள்ளது.
உக்ரைனுடனான போர் ஆரம்பித்த பிறகு, ரஷ்யாவின் எண்ணெய் விற்பனையில் மிகப்பெரிய அடி விழுந்தது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

