நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களை சந்தித்துள்ள போதும் அவர்கள் குறித்து யாரும் அக்கறைகொள்ளவில்லை என மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலாம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மன்னாரிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி கடற்றொழிலாளர்களின் நலனை கருத்தில்
கொண்டு அவர்களுக்கு இழப்பீடுகளை வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக
சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புயல் மற்றும் வெள்ளம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக கடற்றொழிலாளர்களும் பாதிக்கப்பட்டதோடு,மன்னார் மாவட்டம் முழுமையாக
பாதிக்கப்பட்டது.
பாதிப்புகளுக்கான இழப்பீடுகள் தொடர்பாகவும்,நாளைய தினம்
சனிக்கிழமை மன்னார் மாவட்டத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள
நிலையில்,மாவட்டத்தின் பாதிப்புக்களை ஆராய்வதற்காகவும் வருகை தர உள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் தீவை எடுத்துக்கொண்டால் அதிகளவான கிராமங்கள் கடற்றொழிலாளர் கிராமங்களாக காணப்படுகின்றன.
கலந்துரையாடல்
மேலும் தேவன் பிட்டி தொடக்கம் முள்ளிக்குளம் வரை
உள்ள கடற்றொழிலாளர்களும் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் கடற்றொழிலாளர்களின் பாதிப்பக்கள் குறித்து இடம்பெற்ற
கலந்துரையாடல்களில் பேசப்படவில்லை என்ற முறைப்பாடுகள் கிராம மட்ட கடற்றொழிலாளர் அமைப்புக்கள் ஊடாக சமாசத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக நேற்றைய தினம் வியாழக்கிழமை கடற்தொழில் திணைக்கள உதவி
பணிப்பாளரை சந்தித்து குறித்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி இருந்தோம்” என கூறியுள்ளார்.

