இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை இன்று சந்தித்தார்.
புதுடில்லியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல்
உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து இருவரும் கருத்துக்களைப்
பரிமாறிக்கொண்டனர்.
இந்திய – இலங்கை கூட்டாண்மை, பிராந்திய ஸ்திரத்தன்மை, தொடர்புகள் மற்றும்
பரஸ்பர முன்னேற்றம் தொடர்பில் இரு தரப்பினரின் அர்ப்பணிப்புகள் குறித்தும் பல
கருத்துக்களை இருவரும் பரிமாறிக் கொண்டனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி
இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்,
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை
மீண்டுமொரு முறை மீண்டெழுந்து நிற்பதற்குத் தேவையான பயன்பெறும்
குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை இந்தியாவிடமிருந்து பெற்றுத் தந்தமைக்கு
எதிர்க்கட்சித் தலைவர் நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் நீண்டகால பொருளாதார மறுமலர்ச்சியைத் திட்டமிடுவதற்காக இன்றைய
காலத்தைப் பயன்படுத்துவது குறித்து பல கருத்துக்களை கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்
இதன்போது முன்வைத்தார்.
இலங்கைப் பொருளாதாரத்தில் கண்டு வரும் முன்னேற்றங்கள், தொடர்ச்சியாக நடந்து
வரும் சீர்திருத்தங்கள் மற்றும் கடன் நிலைத்தன்மையைப் பேணுவதற்கான திட்ட
வரைபடம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விளக்கமளித்தார்.
இதன்பிரகாரம், 2028 முதல் கடன் திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கும் போது,
ஐ.எம்.எவ். வேலைத்திட்டத்துக்குப் பிந்தைய காலகட்டத்தில் எதிர்பார்க்கப்படும்
சவால்களையும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கோடிட்டுக் காட்டினார்.
இதன்
பொருட்டான பிராந்திய முதலீடு மற்றும் ஒத்துழைப்பால் ஆதரிக்கப்படும் ஒரு
நிலைபேறான அபிவிருத்தி மூலோபாயத்தின் அவசியப்பாடு தொடர்பிலும் எதிர்க்கட்சித்
தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

வர்த்தகம், எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்
வர்த்தகம், எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய துறைகளில்
ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இங்கு பல யோசனைகளை இரு தரப்பினராலும்
முன்வைக்கப்பட்டன.
மேலும், இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் கொள்ளவுத் திறனை
விரிவுபடுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதோடு, வலயமைப்பு தொடர்புகளை
விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர்
எடுத்துரைத்தார்.
பூட்டான் மற்றும் நேபாளத்துடனான இந்தியாவின் வெற்றிகரமான கூட்டாண்மையைப்
பயன்படுத்திக் கொண்டு, மின்சாரம் மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு
தொடர்பில் ஆராயும் பொருட்டு, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சு வசதிகளைச் செய்து தரும் என்று
அமைச்சர் ஜெய்சங்கர் இதன்போது உறுதியளித்தார்.
சமுத்திர, விமான இணைப்புச் சேவைகள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள இரு
நாடுகளிடையேயான மின்சார இணைப்புக் கட்டமைப்பின் இடைத் தொடர்புகள் உள்ளிட்ட
முக்கிய ஒத்துழைப்பு முயற்சிகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும்
இங்கு மதிப்பாய்வு செய்தனர்.
இந்திய பெருங்கடல் சார் பாதுகாப்பு கட்டமைப்பு
பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையையும், கடல்சார் போக்குவரத்தின்
சுதந்திரத்தையும் பேணிச் செல்வதற்கு இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தை
உணர்ந்து, பிராந்திய பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் கண்டு வரும் இந்தியப்
பெருங்கடல் சார் பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்கத்தில் இலங்கையின் வகிபாகம்
குறித்தும் இவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
மூலோபாய சமநிலை மற்றும் சுயாதீனத்தைப் பேணிக் கொண்டு, அனைத்து
பங்குதாரர்களுடனும் வெளிப்படையாக தொடர்புகளைப் பேணி, நடைமுறைக்கு ஏற்ற அணிசேரா
கொள்கைக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.
ஜெய்சங்கர் இந்த அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு, இலங்கையின் ஸ்திரத்தன்மை
இந்தியாவின் சொந்த பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு அவசியமாக அமைந்து
காணப்படுகின்றது என்றும் குறிப்பிட்டார்.

