யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவின்
இரண்டாம் நாள் நிகழ்வு, பாடசாலையின் திறந்தவெளி அரங்கில் நேற்று (25.07.2026)
சனிக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் க.சுலபாமதியின் தலைமையில் நடைபெற்ற இந்த வரலாற்றுச்
சிறப்புமிக்க நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம
விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
‘விக்ரோறிய வித்தகம்’ எனும் சிறப்பு மலர்
இவ்விழாவின் பிரதான அம்சமாக விக்ரோறியா கல்லூரியின் 150 ஆண்டு கால வரலாற்றைப்
பறைசாற்றும் ‘விக்ரோறிய வித்தகம்’ எனும் சிறப்பு மலர் உத்தியோகபூர்வமாக
வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வலிகாமம் மேற்குப் பிரதேச சபையின்
தவிசாளர் விக்ரோறியன் ச.ஜெயந்தன் மற்றும் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர்
ஜமுனா ராஜசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக்
கலந்துகொண்டிருந்தனர்.
விசேட பரிசில்கள் வழங்கி கௌரவிப்பு
மங்கல விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், வரவேற்பு
நடனம், குழு இசை, ‘பதம்’ நடனம், சிங்களப் பாடல், ‘காலிங்க நர்த்தனம்’ நாட்டிய
நாடகம் மற்றும் ‘துப்பல் பரிசு’ நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகள்
அரங்கேறிச் சபையோரைச் சிறப்பித்தன.

அத்துடன், மாணவர்களுக்கும்,
பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகிய மாணவர்களுக்கும் இதன்போது விசேட பரிசில்கள்
வழங்கி கௌரவிக்கப்பட்டன.





Source: https://ibctamil.com/article/victoria-colleges-150th-anniversary-celebration-1785078214

