நிறுவனங்களை அரசியல் பழிவாங்கல்களுக்காகப் பயன்படுத்தும் “Institutional Weaponization” என்ற தவறான அரசியல் உத்தியை தற்போதைய அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தொடர்பான சமீபத்திய விவகாரங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அரசியல் எதிராளிகளை முடக்குவதற்கும் அவர்களின் குரலை அடக்குவதற்கும் அரச அதிகாரமும் விசாரணை நிறுவனங்களும் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பயணம் செய்யும் போது வீதிகள் மூடப்படாது என அரசாங்கம் வழங்கியிருந்த வாக்குறுதிகள் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் சஞ்சீவ எதிரிமான்ன குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பேருவளை மற்றும் புலத்சிங்கள பகுதிகளுக்கு விஜயம் செய்தபோது வீதிகள் மட்டுமன்றி, பேருவளை மீன்பிடித் துறைமுகத்திற்குள் படகுகள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் காலத்தில் மீனவர்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்ட புதிய மொபைல் செயலி தொடர்பான வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே, சமூக ஊடகங்களில் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக வெளியிடப்படும் கொலை அச்சுறுத்தல்கள் மற்றும் போலிப் பிரசாரங்கள் தொடர்பில் பலமுறை முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், விசாரணை நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

