ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் துர்க் தொடக்க உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைமைகள் குறித்தும் அவர் விசேடமாகக் குறிப்பிட்டார்.
இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், நாட்டில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தமக்கான முழுமையான தீர்வைப் பெறவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் துர்க் தனது அண்மைய அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அறிக்கை இந்த வாரம் பேரவையில் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த அமர்வில், இலங்கை விவகாரங்களுக்கு மேலதிகமாக ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், சூடான், வெனிசுலா மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் பாரிய மனித உரிமை நெருக்கடிகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்த விவகாரங்கள் தொடர்பான விரிவான அறிக்கைகளைப் பரிசீலித்து, உரிய தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

