நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பலத்த காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்னெச்சரிக்கை நிலையத்தினால் இந்த அறிவித்தல் இன்று (10) மாலை வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போதைய நிலவும் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காற்று நிலைமை காரணமாக, மத்திய, சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இந்த பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த பொதுமக்கள் பாதுகாப்பாகவும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
பலத்த காற்று வீசும் சந்தர்ப்பங்களில் வீடுகளின் கூரை தகடுகள் மற்றும் ஓடுகள் பெயர்ந்து செல்லக்கூடும் என்பதுடன், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கு பாரிய சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மரக்கிளைகள் முறிந்து விழுதல், வீதியோரங்களில் உள்ள பாரிய மரங்கள் வேரோடு சாய்ந்து விழுதல், நெற்செய்கை மற்றும் வாழை, பப்பாசி போன்ற பழப்பயிர்கள் சேதமடைதல், துறைமுகங்களில் தரித்து வைக்கப்பட்டுள்ள படகுகள் சேதமடைதல் மற்றும் கடற்கரையோர தாழ்நிலப் பகுதிகள் கடல் நீரினால் மூழ்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறான அனர்த்த நிலைமைகளின் போது பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர கால நடவடிக்கைகளுக்கான மத்திய நிலையம், 117 என்ற அவசர அழைப்பு இலக்கம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவுகள் 24 மணிநேரமும் தயார் நிலையில் உள்ளது.
Source: https://samugammedia.com/kites-can-fly-electricity-may-be-cut-off-strong-wind-warning-1781099486

