வழக்கு ஒன்று தொடர்பில் ஆட்சேபனை கிளப்பியமை சம்பந்தமாக செலவுத் தொகையாக தலா 10 ஆயிரம் ரூபா செலுத்தும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய உத்தரவையும் மேற்படி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணையையும் இடைநிறுத்தி வைத்து யாழ்ப்பாணத்தில் இயங்கும் சிவில் மேன்முறையீட்டுக்கான மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
நீதிபதிகளான இராமக்கமலன், றிஸ்வி ஆகியோரைக் கொண்ட ஆயமே இந்த உத்தரவை விடுத்துள்ளது.
வலிகாமம் வடக்குப் பிரதேச சபைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட பொன்னம்பலம் இராசேந்திரன், பிரதேச சபைத் தவிசாளர் தெரிவின் போது கட்சிக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் அவரைக் கட்சியிலிருந்து இடைநிறுத்தி கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் அவருக்குக் கடிதம் அனுப்பி இருந்தார்.
அந்த உத்தரவை ஆட்சேபித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகிய தரப்பினரை எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிட்டு இராசேந்திரன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் இலங்கைத் தமிழரசுக் கட்சி கூட்டிணைக்கப்படாத ஒரு நிறுவனம் என்ற காரணத்தால் அதனை ஒரு சட்டபூர்வமான ஆளாகக் கருதி அதற்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என்றும், அப்படித் தொடர்வதாயின் இந்த நிறுவனத்துக்கு எதிராக அதன் தலைவர், பொதுச்செயலாளரின் பெயர் குறிப்பிட்டு வழக்குத் தொடரப்பட்டிருக்கின்றது என்பதை பத்திரிகை ஒன்றின் மூலமாக பகிரங்கப்படுத்தி அறிவிக்க சிவில் நடவடிக்கை சட்ட கோவை வலியுறுத்துவதால் அதனையும் மனுதாரரர் செய்யாத காரணத்தால் இந்த வழக்கை மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும், மாவட்ட நீதிமன்றத்தில் எதிர்மனுதாரர்களாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சி.வி.கே.சிவஞானம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சார்பில் பூர்வாங்க ஆட்சேபனை கிளப்பப்பட்டிருந்தது.
அந்த ஆட்சேபனையை நிராகரித்த யாழ். மாவட்ட நீதிமன்றம், ஆட்சேபனையைக் கிளப்பியமையால் ஏற்பட்ட செலவுத் தொகையாக மனுதாரருக்கு தலா பத்தாயிரம் ரூபா வழங்கும்படி எதிர்மனுதாரர்களான சி.வி.கே.சிவஞானம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவை ஆட்சேபித்து அவர்கள் இருவரும் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்த சிவில் மேன்முறையீட்டுக்கான மேல்நீதிமன்றம் மேற்படி மாவட்ட நீதிமன்றத்தின் செலவுத் தொகை தொடர்பான கட்டளையையும் அந்த வழக்கு விசாரணையையும் இடைநிறுத்தி உத்தரவு பிறப்பித்தது.
இந்த மேன்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா என்பது தொடர்பில் முடிவு செய்வதற்காக வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 25ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இன்றைய வழக்கின் போது சுமந்திரன் தம் சார்பில் தாமே முன்னிலையாகி வாதாடினார். சி.வி.கே.சிவஞானம் சார்பில் சட்டத்தரணி கே.வி.எஸ்.கணேசராஜாவும், இராசேந்திரன் சார்பில் சட்டத்தரணி சுபாஸ்கரனும் முன்னிலையாகினர்.

