இலங்கை நீதித்துறை முறைமையில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவுபடுத்துவதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி முன்மொழிவொன்றை முன்வைத்துள்ளது.
நாட்டின் நீதிமன்றங்களில் தற்போது சுமார் 1.1 மில்லியன் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நீதி அமைச்சின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், அவற்றைத் துரிதமாக விசாரணை செய்து தீர்வு காண்பதற்கான முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ள இந்த தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (03) குறித்த முன்மொழிவில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டனர்.
இதனையடுத்து, குறித்த முன்மொழிவு இன்று (04) பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுவினரால் கையளிக்கப்பட்டது.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் வகையில், நீதித்துறை செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதே இந்த தெரிவுக்குழுவின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

