அரச கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில் இன்று (18) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக காலை 10 மணியளவில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
அரச கால்நடை வைத்தியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்குமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக, அலுவலக உத்தியோகத்தர்களின் தட்டுப்பாட்டை நீக்குதல், நியாயமான வரவுப் பதிவு முறையை நடைமுறைப்படுத்துதல், போதுமானதும் பொருத்தமானதுமான வாகனங்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தியர்கள் முன்வைத்தனர்.
அத்துடன், பெண் கால்நடை வைத்தியர்கள் வெளிக்களக் கடமைகளுக்குச் செல்லும் போது பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கால்நடை வைத்தியர்களின் பிரச்சினைகள் காரணமாக சேவைகள் பாதிக்கப்படுவதால், பண்ணையாளர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், பண்ணையாளர்களின் கால்நடைகளின் நலனைக் கருத்திற் கொண்டு, நாளை (19) முதல் கால்நடைகளுக்கான வைத்திய சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், ஏனைய கோரிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகளை கைவிட முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

