யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மட்டுவில் பகுதியில் இருந்து புத்தூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன், திடீரென குறுக்கே சென்ற முச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மோதலின் தாக்கத்தால் டிப்பர் வாகனம் முச்சக்கர வண்டியின் மீது ஏறியதாக கூறப்படுவதுடன், அதில் பயணம் செய்த மூன்று இளைஞர்களும் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.
படுகாயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய வாசன் காஜானன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் காயமடைந்த மற்றைய இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துயரச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Source: https://samugammedia.com/fatal-accident-in-puttur-21-year-old-youth-dies-1780721729

