பாரிய சமூகப் பேரழிவை ஏற்படுத்தி வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு மீனவ சமூகமும் ஆதரவளிக்க வேண்டும் என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
பேருவளை, பண்டாரவத்தையில் அமைந்துள்ள புனித லாசர் ஆலயத்தில் நேற்று (06) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
சில போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு மீன்பிடிப் படகுகள் பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய பேராயர், இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் இருந்து மீனவ சமூகத்தினர் விலகியிருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சிலரின் குறுகிய நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள் சமூகத்தில் பாரிய சீரழிவை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, நாட்டின் இளம் தலைமுறையினர் பலர் போதைப்பொருளுக்கு அடிமையாகி தமது எதிர்காலத்தையும் வாழ்க்கையையும் இழந்து வருவதாக பேராயர் தெரிவித்தார்.
எனவே, போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், அதற்கு மீனவ சமூகமும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

