புத்தளம் – கற்பிட்டி பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாகக் கூறப்படும் 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று சனிக்கிழமை (19) கற்பிட்டி – அல் மனார் பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி – அல் மனார் பகுதியைச் சேர்ந்த குறித்த நபரை சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 500க்கும் அதிகமான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பிட்டி நகரில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்த போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளும் மேலதிக விசாரணைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
புத்தளம் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாசவின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயற்படும் பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://samugammedia.com/selling-drugs-targeting-students–one-person-arrested-1789886941

