வெப்பச் சுட்டெண்ணின் தாக்கம் காரணமாக இன்று (26) பகல் வேளையில் கிழக்கு மாகாணத்திலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலனறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அதிக வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு முதல் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் அடிக்கடி காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும். இதனால், குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படலாம்.
மேலும், புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளிலும் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

