கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் பிமல்
ரத்நாயக்க மற்றும் சுங்கத் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் சீவலி
அருட்கொட ஆகியோரைக் கைது செய்து முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பரிசோதனைகளின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக்
குறிப்பிட்ட விடயங்களுக்காக நானும், உதய கம்மன்பிலவும் குற்றப் புலனாய்வுத்
திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்துள்ளோம்.
குற்றத்தை வெளிக்கொண்டு வந்தவர்களை விசாரிப்பது
இந்தக் கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால்
நியமிக்கப்பட்ட குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
அந்த அறிக்கையில்
சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை முறையற்ற
செயற்பாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறாயின் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் சுங்கத்
திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் சீவலி அருட்கொட ஆகியோரைக் கைது செய்து
முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
குற்றச் செயலுடன் தொடர்புடையவர்களை விசாரிக்காமல், குற்றத்தை வெளிக்கொண்டு
வந்தவர்களை விசாரிப்பது சட்டத்துக்கு முரணானது என்பதைக் குற்றப் புலனாய்வுத்
திணைக்களம் விளங்கிக்கொள்ள வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.