வடக்கிலும் கிழக்கிலும் குரல் கொடுப்பது போல சர்வதேச நாடுகளிலும் எங்களுக்காக
குரல் கொடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி அ.அமலநாயகி
கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் ஊடக சந்திப்பு
இன்று மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்றது.
பொறுப்பு கூறும் தன்மை
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 30 திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், அதனை முன்னிட்டு
திருகோணமலையில் சிவனாலயத்திற்கு முன்பாக இருந்து பேரணி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளோம். அதேவேளை வட மாகாணத்திலும் ஒரு பேரணியை மேற்கொள்ளவுள்ளோம்.
சர்வதேச நீதி பொறிமுறையை நாடியே நாங்கள் நீதி கேட்கும் பேரணி ஒன்றினை
நடாத்தவுள்ளோம், இந்நிகழ்வில் அனைத்து தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
பொறுப்பு கூறும் தன்மை இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை என்பதால் சர்வதேசத்தை
நாம் நாடி நிற்கின்றோம்.
முறையிட்ட எம்மைத் தான் தேடி தேடி விசாரனை செய்கின்றார்கள் அதனால்தான் ஐக்கிய
நாடுகள் சபையை நாம் நாடி நிற்கின்றோம்.
ஜெனிவா கூட்டத் தொடர் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ளது. அதிலாவது எமது
வலிகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.
மரணம் என்பது எல்லோருக்கும் வரும் அது கண் முன்னே நடந்தால் பரவாயில்லை. ஆனால்
எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என வெளிக்கொணர வேண்டும்.
வடக்கிலும் கிழக்கிலும் குரல் கொடுப்பது போல சர்வதேச நாடுகளிலும் எங்களுக்காக
குரல் கொடுக்க வேண்டும் எனவும் கோருகின்றோம்.
எமது ஆதரவு யாருக்கு
என்று பொதுவாக எம்மால் வெளியிட முடியாது.
யார் ஜனாதிபதியானாலும் எமது கோரிக்கைகளுக்கு தீர்வு தர வேண்டும் என்பதே எமது
நிலைப்பாடாகும் என குறிப்பிட்டுள்ளார்.