இரணைமடு நீர்ப்பாசன செய்கை தொடர்பில் முரசுமோட்டை கமக்காரர் அமைப்பின் விவசாயிகள் செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு இலங்கை மனித
உரிமைகள் ஆணைக்குழு முக்கிய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
குறித்த அழைப்பு கடிதத்தில் எதிர்வரும் 10.09.2024 (செவ்வாய்கிழமை) திகதி அன்று மு.ப.10.00 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு – யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்திற்கு (இல. 42, கோவில் யாழ்ப்பாணம்) சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்தர்,
கிளிநொச்சி கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர், கிளிநொச்சி மாவட்ட அரச
அதிபர் ஆகியோரை உள்ளடக்கி இந்த கடிதம் வரையப்பட்டுள்ளது.
சிறுபோக நெற்செய்கை
HRC/KIL/028/2024 என்ற இலக்கத்தில் முரசுமோட்டை கமக்காரர் அமைப்புப் பகுதியினரால்
மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முரசுமோட்டை சுமக்காரர் அமைப்பினைச் சேர்ந்த விவசாயிகள்
சிலரினால்
இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 2024ஆம் வருட சிறுபோக நெற்செய்கைக்காக
பணம் அறவீடு செய்யப்பட்டிருந்தது.
அத்துடன், குறிப்பிட்ட விவசாயிகளுக்கு மாத்திரம் பயிர்ச்செய்கை நிலம் காட்டப்படாமல் பயிர் செய்ய இயலாத நிலையை ஏற்படுத்தியதனால்
தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, பொருளாதார ரீதியிலான பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்கள்
இது தொடர்பான விசாரணையில் சகல
ஆவணங்களுடன் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள் எனவும், தங்களது அறிக்கை தொடர்பில்
முறைப்பாட்டாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரதிவாதத்தின் நகல்கள் தகவலுக்காக இணைக்கப்பட்டுள்ளன எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரணைமடு நீர்ப்பாசன செய்கையில் பல்வேறு முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளமை தொடர்பில்
விவசாயிகளால் தொடர்ச்சியாக முறைப்பாடுகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு
வருகின்றன.
இந்தநிலையில், முரசுமோட்டை விவசாயிகளால் பல்வேறு தரப்பினருக்கும் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தற்போது விசாரணைக்கு அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.