கண்டி மாவட்டத்தில் வேட்பாளர் ஒருவர் ஆயிரக்கணக்கான மக்களை அழைத்து பலமுறை அவர்களுக்கு விருந்து வழங்கியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கண்டி மாவட்டத்தின் ஏனைய வேட்பாளர்களும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக பல தடவைகள் இவ்வாறான விருந்து உபசாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் சட்டத்தை மீறும் நடவடிக்கை
இவ்வாறு விருந்து உபசரிப்பு வழங்குவது தேர்தல் சட்டத்தை மீறும் நடவடிக்கை எனவும், பணம் இல்லாத ஏனைய வேட்பாளர்களுக்கு பாரிய அநீதி இழைப்பதாகவும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
இவ்வாறு வாக்காளர்களுக்கு விருந்து கொடுப்பது சம்பந்தப்பட்டவரின் பதவியை உச்ச நீதிமன்றத்தால் இரத்து செய்யக் கூட வழிவகுக்கும் என்று கண்காணிப்பு அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இது குறித்து முறைப்பாடு வழங்கப்பட்ட போதிலும், அப்பகுதியில் உள்ள சில தேர்தல் அதிகாரிகள், இவ்விடயத்தினை கண்டும் காணாமல் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.