கிளிநொச்சி- தர்மபுரம் பகுதியில் பல மில்லியன் ரூபா செலவில்
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை ஏழு வருடமாகியும் இன்றுவரை மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
குறித்த வைத்தியசாலை கால்நடைகளின் தங்குமிடமாகவும், பற்றைக் காடாகவும் காட்சியளிக்கின்றது.
இந்த வைத்தியசாலையானது கண்டாவளை பிரதேச செயலாளர்
பிரிவுக்கு உட்பட்ட 16 கிராம மக்கள் பயன் பெறக் கூடிய வகையில் நவீன ஆயுர்வேத
வைத்தியசாலை என புதிதாக நிர்மாணிக்கப்பட்டு இருந்த போதிலும் மக்கள்
பாவனைக்கு கையளிக்கப்படவில்லை.
கோரிக்கை
இந்தநிலையில், ஆயுர்வேத வைத்தியசாலையை மிக விரைவில்
மக்களினது பாவனைக்கு கையளிக்க வேண்டுமென அந்தப் பகுதியில் வாழும் பொது அமைப்புகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தற்பொழுது அதிகமானோர் ஆயுர்வேத வைத்தியசாலையே நாடி
வருகின்றனர்.

எமது பகுதியில் ஆயுர்வேத வைத்தியசாலையை வைத்துக் கொண்டு
வேறு பகுதிக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே
மக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் ஆயுர்வேத
வைத்தியசாலையை எமது பயன்பாட்டுக்கு விரைவாக வழங்க வேண்டும் என பொது அமைப்புக்கள் வலியுறுத்தி
உள்ளனர்.

