உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை (Sri lanka) பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டால் இந்தப் பெயர் அறிவிக்கப்பட்டதாக்கத் தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார விஞ்ஞானம் மற்றும் சமாதானத்திற்கான சர்வதேச நிறுவனத்தால் பயங்கரவாத தாக்கத்தின் அடிப்படையில் நாடுகளின் தரவரிசையின்படி உலகளாவிய பயங்கரவாத குறியீடு குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னேற்றமடைந்த இலங்கை
குறியீட்டில் பரிசீலிக்கப்பட்ட 163 நாடுகளில் இலங்கை 100 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக 12வது வருடாந்த பயங்கரவாத குறியீடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத குறியீடு பூச்சியத்துடன், இலங்கை 63 நாடுகளுடன் குறியீட்டில் மிகக் குறைந்த இடத்தைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதலிடத்தில் புர்கினா ஃபாஸோ
இந்த அறிக்கையின்படி முதல் மூன்று இடங்களில் புர்கினா ஃபாஸோ (Burkina Faso), பாகிஸ்தான் (Pakistan), சிரியா (Syria) உள்ளிட்ட நாடுகள் காணப்படுகின்றன.
இந்த அறிக்கையின்படி பயங்கரவாத அச்சுறுத்தல் குறைவாக உள்ள நாடாக உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டில் இலங்கை 100 ஆவது இடத்தில் உள்ளது.
2023 ஆம் ஆண்டில் இந்தக் குறியீட்டில் 36வது இடத்திலிருந்த இலங்கை, 64 இடங்கள் பின்தங்கி, பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் குறைப்பதில் தெற்காசிய வலயத்தில் மிகவும் முன்னேறிய நாடாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.