யாழ்ப்பாணம் (Jaffna) – நெல்லியடி காவல்துறையினரின் முறையற்ற செயற்பாடு குறித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
நெல்லியடி காவல்துறையினர் தன்னை கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தி கையையும்
முறித்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் இலங்கேஸ்வரன் என்பவர்
குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
காவல்துறையினரின் தாக்குதல்
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 18ஆம் திகதி எனது அம்மா வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றின் முன்னால்
நின்ற போது, முச்சக்கர வண்டியில் வந்த காவல்துறையினர் என் மீது தாக்குதல்
மேற்கொண்டு, கைவிலங்கு இட்டு, முச்சக்கர வண்டியின் உள்ளே கீழே போட்டு, தமது
கால்களுக்குள் என்னை அழுத்தி பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கே எதற்காக என்னை கைது செய்தீர்கள் என்று கேட்ட போது, வயர்
வெட்டிய சம்பவம் தொடர்பில் கைது செய்தததாக கூறினார்கள். ஆனால் எனக்கு அப்படியொரு சம்பவம்
தெரியவில்லை.
பின்னர் எனக்கு கையில் வலி ஏற்பட்டு வலியினால் துடித்த நிலையில் என்னை
வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுமாறு கூறிய போது மந்திகை வைத்தியசாலையில் என்னை
அனுமதித்தனர்.
மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டேன்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில் “வீடியோ அழைப்பு” ஊடாக
பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் என்னை பார்வையிட்டு, எனக்கு பிணை
வழங்கி எனது வழக்கினை எதிர்வரும் 10ஆம் மாதத்திற்கு திகதியிட்டுள்ளார்.
என் மீதான தாக்குதல் மற்றும் சித்திரவதை குறித்த மனித உரிமை ஆணைக்குழுவின்
யாழ். பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்” என தெரிவித்தார்.
https://www.youtube.com/embed/8tKn77qdTf0