மட்டக்களப்பில் அவுஸ்ரேலியா நாட்டைச் சேர்ந்த ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குறித்த சடலமானது மட்டக்களப்பு- மாமாங்கம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்றையதினம் (26) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் யாழ்ப்பாணம்- மானிப்பாயைச் சேர்ந்த 71 வயதுடைய செல்லத்துரை கெங்காதரன் என்பவரே
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் இருந்து மட்டக்களப்பு, மாமாங்கம் 6ஆம் குறுக்கு வீதியிலுள்ள வீடு ஒன்றில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று(25) படுக்கையறையில் இரவு நித்திரைக்கு சென்றவர் அதிகாலையில் நித்திரையில் இருந்து எழும்பாத நிலையில் அவர் உயிரிழந்துள்ளதை கண்டு பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார் நீதிமன்ற அனுமதியை பெற்று பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.