கொழும்பு (Colombo) – கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று முன்தினம் (17) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாகப் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
2023ஆம் ஆண்டு வத்தளை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் திட்டமிட்ட குற்றக்கும்பலின் உறுப்பினர் எனக் கூறப்படும் சேதவத்த கசுனுக்குச் சொந்தமான ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பழிதீர்க்கும் விதமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
காவல்துறையினர் சந்தேகம்
அத்துடன், போதைப்பொருள் ஒப்பந்தம் தொடர்பான நிதி தகராறு துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் முகத்துவாரம் – மிஹிஜய செவன வீட்டுத் திட்டத்தில் வசித்துவரும் 22 மற்றும் 28 வயதுடைய இருவரே காயமடைந்தனர்.
துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய உந்துருளியொன்று நேற்று (18) காலை மாதம்பிட்டிய குப்பை மேட்டுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான மோதர நிபுணவின் உதவியாளர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.