தெல்லிப்பளை வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவினுள் அத்துமீறி நுழைந்து
அடாவடியில் ஈடுபட்டதுடன் , வைத்தியர்களை அச்சுறுத்திய பெண்ணொருவர் உள்ளிட்ட
இருவர் மீது பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில் அசமந்தமாக செயற்படுவதாக
வைத்தியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
காங்கேசன்துறை பகுதியில் பெரியளவிலான தங்குமிடம் ஒன்றினை அமைத்து வரும் நபர்
ஒருவரின் உறவினர் சுகவீனம் காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை
பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வைத்தியசாலையில் சிகிச்சை
அவருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த வேளை , குறித்த நபரின்
மகன் மற்றும அவரது உதவியாளரான பெண்ணொருவரும் , அவசர சிகிச்சை
பிரிவினுள் நுழைந்து , நோயாளியை , தனியார் வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்ற
வேண்டும் என கூறியுள்ளனர்.
அதற்கு உரிய நடைமுறைகளை பின் பற்றியே நோயாளிகளை மாற்ற முடியும் எனவும் ,
குறித்த வைத்தியசாலையில் இருந்து நோயாளர் காவு வண்டியை நோயாளி
சார்பிலானவர்களே வரவழைத்து அழைத்து செல்ல வேண்டும் என கூறியுள்ளனர்.

அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என உதவியாளர் என கூறி சென்ற பெண்
வைத்தியர்களுடன் தர்க்கப்பட்டுள்ளார்.
அதன் போது வைத்தியர்கள் , ஒருவர் மாத்திரமே அவசரசிகிச்சை பிரிவில் நோயாளரை
பார்வையிட அனுமதி என கூறி உதவியாளர் பெண்ணை வெளியே
செல்லுமாறு பணித்துள்ளனர்.
அதற்கு அப்பெண் வைத்தியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி , தமக்குள்ள அரசியல்
செல்வாக்கினை பயன்படுத்தி , உங்கள் அனைவருக்கும் நடவடிக்கை எடுப்பேன் என கூறி
மிரட்டி , வைத்தியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் , அவசர சிகிச்சை
பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு இடையூறு விளைவுக்கு
முகமாக நடந்து கொண்டதுடன் , வைத்தியசாலையில் செயற்பாடுகளுக்கும் இடையூறு
விளைவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து குறித்த பெண் மற்றும்
அவருடன் சென்ற நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்காது பொலிஸார் தொடர்ந்து
அசமந்தமாக செயற்பட்டு வருவதாக வைத்தியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
காங்கேசந்துறை
அதேவேளை , காங்கேசந்துறை பகுதியில் தங்குமிடம் அமைத்து வருபவர் ,
தங்குமிடத்திற்கு வெளிப்புறமாக வீதி வரையில் கொட்டகை ஒன்றினை அமைத்துள்ளார்.

அதனை அகற்றுமாறு வலி. வடக்கு பிரதேச சபையினர் பல்வேறு தடவைகள் அறிவுறுத்தியும்
, தனக்கு “ஜனாதிபதி வரையில் செல்வாக்கு இருக்கு” என கூறி பிரதேச சபையின்
அறிவுறுத்தலை புறம்தள்ளி நடந்து வருவதாகவும், வடக்கிற்கு பொறுப்பான பொலிஸ்
உயர் அதிகாரிகளுடன் செல்வாக்கு மிக்க நபராக உள்ளதால் , குறித்த பெண்ணை
பொலிஸார் கைது செய்வதனை தடுக்கும் வகையில் தெல்லிப்பளை பொலிஸாருக்கு அழுத்தம்
பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஊழலற்ற அரசாங்கம் என கூறி வரும் தேசிய மக்கள் சக்தியினர், இவ்வாறு
உள்ளூர்களில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் பெயரை பயன்படுத்தி , சட்டவிரோத
செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

