மதுபோதையில் தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதவான் சம்பிகா ராஜபக்ஷ இன்று(27) உத்தரவிட்டார்.
அத்துடன் மேலதிகமாக ரூ. 40,000 அபராதமும் விதிக்கப்பட்டது.வேதநாகம் எட்வின் நிமல் என்ற பேருந்து ஓட்டுநருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
காவல்துறையினர் சோதனை
தனியார் நிறுவன ஊழியர்கள் குழுவை ஏற்றிக்கொண்டு பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த பேருந்து, பாணந்துறை நல்லுருவப் பகுதியில் நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டபோது, சாரதியிடமிருந்து மது வாசனை வந்தது.
காவல்துறையினர் அவரைக் காவலில் எடுத்து, பரிசோதித்தபோது அவர் மது அருந்தியிருந்ததை உறுதிப்படுத்தினர்.
கடுமையாக எச்சரித்த பின்னர் விதிக்கப்பட்டது தடை
இதனையடுத்து காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி, பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததற்காக அவரை கடுமையாக எச்சரித்த பின்னர் தலைமை நீதிபதி தண்டனையை விதித்தார்.