முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செம்மணி புதைகுழி வழக்கு குறித்து நீதிமன்றால் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட தகவல்

செம்மணி மனிதப் புதைகுழி எதிர்வரும் 20 ஆம் திகதி மீள் சுத்தப்படுத்தபடுவதாகவும்
அதற்குப் பின்னர் 22 ஆம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் என்றும்
நீதவான் கூறியுள்ளதாக  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் இன்று
எடுத்துக் கொள்ளப்பட்ட போது அங்கு ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் நீதிமன்றத்தில் இன்று அழைக்கப்பட்டது. அந்த
வேளையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஓர் அறிக்கையையும் சட்ட வைத்திய
அதிகாரி பேராசிரியர் ஒரு அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளார்கள்.

நீதிவான் நடவடிக்கை

இதில் பேராசிரியருடைய அறிக்கையிலே ஸ்கானர் பாவிக்கப்பட்டதற்கு பிறகு இன்னமும்
குறைந்தது எட்டு வார காலத்திற்கு மேலதிக அகழ்வுகள் செய்ய வேண்டிய தேவை
இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

அது சம்பந்தமாக நீதிவான் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இதற்குரிய ஒழுங்குகள்
செய்யுமாறும் கட்டளையிட்டிருக்கிறார்.

யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் நீதிமன்ற அனுமதியைக் கோரி இங்கே
மேற்பார்வையை செய்வதற்கு அனுமதி பெற்றிருந்தது. அந்த வகையிலே இரண்டு தடவைகள்
நான் அங்கே சென்றிருந்தேன். அதனடிப்படையிலே மன்றிலே இன்றைக்கு சில விடயங்களை
மன்றினுடைய கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றேன்.

இதில் முதலாவதாக இந்த அகழ்வு ஒரு மரண விசாரணையாகத்தான் நிகழ்கிறது.

செம்மணி புதைகுழி வழக்கு குறித்து நீதிமன்றால் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட தகவல் | Chemmani Case Sumanthiran Provides Information

குற்றவியல்
நடவடிக்கையிலும் இப்படியான விடயத்துக்கு என்று சட்ட ஏற்பாடுகள் எதுவும்
கிடையாது.

ஆகையினாலே ஒரு உடல் எங்காவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக ஒரு மரண
விசாரணையாகத்தான் அது மாறுகின்றது. அதனால்தான் நீதிவான் அந்த மரண விசாரணையை
நடத்துகின்றார். எந்த மரண விசாரணையிலும் மிக முக்கியமான ஒரு விடயம் அந்த உடல்
யாருடையது என்ற அடையாளப்படுத்துதல். அவ்வாறு அடையாளப்படுத்துவதுதான் பிரதான
நோக்கமாக இருக்கிறது.

ஆகவே அகழ்வுப் பணிகள் நடைபெறுகின்றதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இதனை
அடையாளப்படுத்துவது எப்படி என்ற கேள்வி எழுகிறது.

இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் சட்ட வைத்திய அதிகாரி இன்னுமொரு
விடயத்தையும் மன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். இங்கிருப்பவர்களுக்கு
நிபுணத்துவம் இல்லை என்றெல்லாம் போலியான செய்திகள் ஊடகங்களில்
பரப்பப்படுகின்றது என்றெல்லாம் சொல்லப்பட்டது. அதைப் பற்றிய முறைப்பாடுகள்
நேரடியாக எழுத்து மூலமாக செய்யுமாறு நீதிமன்றத்தால் அவர் பணிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், அகழ்வுப் பணியில் நிபுணத்துவம் இருந்தாலும் அடையாளப்படுத்தலிலே இந்த
நாட்டில் நிபுணத்துவம் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த
விடயம் என்கின்ற சமர்ப்பணத்தை நான் முதலிலே செய்தேன்.

அதற்குச் சான்றாக மன்னார், மாத்தளை போன்ற விடங்களிலும் சான்று பொருள்கள்
முதலில் வெளியே அனுப்பப்பட்டன.

அகழ்வுப் பணி

கடந்த 1999 ஆம் ஆண்டு செம்மணியிலே
கண்டெடுக்கப்பட்ட 15 எலும்புக்கூட்டுத் தொகுதி சான்றுப் பொருள்களும் முதலிலே
ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கேயும் அதற்கான நிபுணத்துவம்
இல்லையென்று திருப்பி கொண்டுவரப்பட்டு, அது பின்னர் கிளாஸ்கோ
பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டு அந்த சான்றுப் பொருள்கள் தற்போது லங்கஷ்யர்
பல்கலைக்கழகத்தில் இருப்பதாக நாங்கள் அறிகின்றோம் என்ற தகவலை மன்றுக்கு நான்
கொடுத்திருக்கின்றேன்.

அந்த வேளையிலே சோமரத்ன ராஜபக்‌ச என்கின்ற ஒரு மரண தண்டனைக் கைதி, மரண தண்டனை
விதிக்கிற போது மேல் நீதிமன்றத்திலே செய்த கூற்றின் அடிப்படையிலேதான் அந்த
அகழ்வு நடத்தப்பட்டது.

ஆனால் 15 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மட்டும் தான் கண்டெடுக்கப்பட்டன. அது
அகழ்வதற்கு முன்னதாக அவர் செய்த கூற்றிலே 300 தொடக்கம் 400 வரையானோர் என்று
அவர் சொல்லியிருக்கிறார்.

செம்மணி புதைகுழி வழக்கு குறித்து நீதிமன்றால் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட தகவல் | Chemmani Case Sumanthiran Provides Information

ஆனாலும் அந்த வேளையில் செய்த அகழ்வுப் பணியிலே 15 மட்டும் தான்
கண்டுபிடிக்கப்பட்டன. இப்பொழுது ஏற்கனவே 147 எலும்புக்கூட்டு தொகுதிகள் இங்கே
கண்டெடுக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினாலே அவர் காண்பித்த இடத்திற்கு மிக
அருகாமையிலே இது இருப்பதால் இதைத்தான் அவர் சொல்லியிருக்க வேண்டும்.

26 வருடங்களுக்கு பிறகு இது தற்செயலாக கண்டெடுக்கப்பட்டதாக இருந்தாலும் இப்படி
இங்கே நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டதென்று அவர் 26 வருடங்களுக்கு
முன்னர் சொன்னமை சரியானதாக இப்பொழுது நிரூபணமாகின்றது என்ற அடிப்படையிலே அந்த
விடயத்தோடு இந்த விடயமும் தொடர்புபட்டது என்பது கண்கூடாகக் தெரிகின்றது என்ற
சமர்ப்பணத்தையும் செய்தேன்.

அந்த விடயத்திலே பி 2899 என்கின்ற வழக்கு யாழ். நீதிவான் நீதிமன்றத்திலே
ஆரம்பிக்கப்பட்டு, பல இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில்
முதலில் வைக்கப்பட்டு, பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில் சிலர்
விடுவிக்கப்பட்டு, பின்னர் ஐந்து பேர் பிணையில் செல்லவும்
அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அந்த வழக்கு அவர்களுடைய பாதுகாப்பின் நிமித்தமாக முதலிலே அனுராதபுரத்துக்கு
இடமாற்றம் செய்யப்பட்டு, அதன் பிறகு அது இப்பொழுது கொழும்பிலே பிரதான நீதிவான்
நீதிமன்றத்திலே இருக்கின்றது என்கின்ற தகவல் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்ட முறைப்பாடுகள்

அதையும் நான் மன்றுக்கு சொல்லி பி 2899 என்கின்ற யாழ். நீதிவான் நீதிமன்ற
வழக்கேட்டில் இருந்து அனுப்பப்பட்ட அந்த வழக்கை மீளவும் இந்த நீதிமன்றத்துக்கே
பாரப்படுத்துமாறு ஒரு கோரிக்கையை நீதிவான் செய்ய வேண்டுமெனக் கேட்டிருந்தேன்.

அவர் இந்த விடயத்திலே அப்படியாக இந்த இரண்டும் தொடர்புபட்டதா என்பதை முதலிலே
பரிசீலித்து அவ்வாறு தொடர்புபட்டதாயின் அதனை மாற்றுவதற்கு நடவடிக்கை
எடுக்குமாறு பணித்திருக்கின்றார்.

அதேபோல் சோமரத்ன ராஜபக்‌ச எந்தக் காலப் பகுதியிலே இங்கு உடல்கள்
புதைக்கப்பட்டது என்று சொன்னாரோ அதே 1999 ஆண்டு அந்தக் காலப் பகுதியிலே இந்தப்
பிரதேசத்திலே பிரதானமாக பலர் காணாமல் ஆக்கப்பட்ட முறைப்பாடுகள் இலங்கை மனித
உரிமை சங்கத்திற்கு கொடுக்கப்பட்டு இருந்ததன் காரணமாக கலாநிதி தேவநேசன்
நேசையாவின் தலைமையிலே இன்னும் மூவரடங்கிய விசாரணைகுழு நியமிக்கப்பட்டு,
அவர்கள் 2003 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி தங்களுடைய விசாரணை அறிக்கையை
சமர்ப்பித்து, அது அந்த நேரமே பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.

செம்மணி புதைகுழி வழக்கு குறித்து நீதிமன்றால் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட தகவல் | Chemmani Case Sumanthiran Provides Information

210 பக்கங்கள் அடங்கிய அந்த அறிக்கையொன்றின் பிரதியை நான் மன்றுக்கு
சமர்ப்பித்து இருக்கிறேன். அந்த அறிக்கையிலே காணாமல் ஆக்கப்பட்டவர்கள்
அரியாலை, சாவகச்சேரி, நாவற்குழி, யாழ்பாண நகர் மற்றும் நகரை அண்மித்த
பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், இதில் 300 இற்கும் மேற்பட்ட
முறைப்பாடுகள் இருந்தாலும் 200 இற்கும் மேற்பட்டவைக்கு படைத்தரப்பினரே
பொறுப்பானவர்கள் என்றும் திட்டவட்டமாக அதிலே சொல்லப்பட்டிருக்கின்றது.

அதில் மேலும் பல விவரங்களும் சொல்லப்பட்டு இருக்கின்றன. அந்தப் படைத்தரப்பினர்
யார், எந்தெந்த முகாம்களில் யார், யார் இருந்தார்கள் என்று பெயர்கள் அதிலே
கொடுக்கப்பட்டிருக்கின்றன். அந்த முகாம்களுக்கு பொறுப்பாக இருந்தவர்கள் யார்
என்ற விவரங்கள் எல்லாம் அதிலே கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆகையினாலே இந்த விவரங்களை இப்பொழுது மன்றிலே சமர்ப்பிக்கின்ற பொழுது இதற்கு
பொறுப்பாக இருந்திருக்க கூடியவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு சந்தர்ப்பம்
கூடுதலாக இருக்கிற காரணத்தினாலே இது சம்பந்தமாக உரிய உத்தரவு கொடுக்க
வேண்டுமென நான் கோரியிருக்கிறேன்.

அப்படியான ஒரு உத்தரவையும் மன்று செய்யவில்லை. ஆனால் அது சம்பந்தமாகவும்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அதனை அறிந்து மன்றுக்கு அறிக்கை
சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டிருக்கிறது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைப் பொறுத்த வரையிலே இந்த விடயங்கள்
சம்பந்தமாக அவர்கள் இப்பொழுது புலன் விசாரணை செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள்.
சாதாரணமாக மரண விசாரணை முடிவடைந்த பிறகுதான் புலன் விசாரணை ஆரம்பமாகும்.
ஆனால், சமாந்தரமாக ஒரு புலன் விசாரணை தேவை என்று பொலிஸ்மா அதிபர் கேட்டுக்
கொண்டதற்கிணங்க அவர்கள் செய்கிறார்கள்.

நிதி ஒதுக்கீடுகள்

ஆரம்பத்திலே அதற்கு எதிர்ப்பு எதுவும் இல்லையென்றாலும் இன்றையதினம் நானும், சட்டத்தரணி மணிவண்ணனும், சட்டத்தரணி குருபரனும் சிலரை வாக்கு மூலம் பெறுவதற்கு
வரவழைத்து அவர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பயமுறுத்தினார்கள்
என்ற முறைப்பாட்டை முன்வைத்திருக்கிறோம்.

அதனடிப்படையிலே வாக்குமூலம் கொடுக்க எவரும் முன்வருகின்ற போது அங்கேயே, இந்த மயானத்திலேயே, அந்தப் பிரதேசத்திலேயே, அனைவரும் காணக்கூடிய இடத்திலேயே, வாக்கு மூலங்களைப் பதிவு செய்வது உசிதமானது என்று நீதிவான்
உத்தரவிட்டிருக்கின்றார்.

நான் விசேடமாக என்னுடைய விண்ணப்பத்திலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை இந்த
விடயத்திலிருந்து அகற்றுமாறு ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கின்றேன். இந்த
வேளையிலே அவர்கள் இதிலே ஈடுபடத் தேவையில்லை. அவர்களை இங்கே இருந்து அகற்றுமாறு
ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கின்றேன்.

அதுமட்டுமல்ல சான்றுப் பொருள்களும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு
அனுப்பப்படுவதாக இருந்தால் அந்தப் பல்கலைக்கழக ஆய்வு கூடங்களிலே இதைச் செய்யப்
போகின்றவர்கள் இப்பொழுது வந்து இதனை மேற்பார்வை செய்ய வேண்டும்.

செம்மணி புதைகுழி வழக்கு குறித்து நீதிமன்றால் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட தகவல் | Chemmani Case Sumanthiran Provides Information

ஏனென்றால் யாருடைய கட்டுக்காவலில் இந்த சான்றுப் பொருள்கள், எப்படியாகக்
கைமாறுகின்றன என்பது ஒரு முக்கியமான விடயம். ஆகையினாலே இதனையும் செய்ய
வேண்டுமென நான் விடுத்த கோரிக்கைக்கு நீதிவான் சட்டவைத்திய அதிகாரியிடத்தே இதை
ஆராயுமாறு ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்.

இதை ஆராய்ந்து எப்படியான பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப முடியுமென்று அறிக்கை
சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றார்.

சட்ட வைத்திய அதிகாரி இன்னுமொரு
விடயத்தை மன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அதாவது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலே மரபணுப் பரிசோதனை செய்வதற்கான ஓர்
ஆய்வுகூடம் நிறுவப்பட்டுக் கொண்டு இருப்பதாகவும், அதற்குத் தேவையான உபகரணங்கள்
வந்து சேர்ந்து விட்டன என்றும் வெகு விரைவிலே தங்களாலே இதனைச் செய்ய
முடியுமென்றும் சொல்லியிருந்தார்.

ஆனால் முதன் முதலிலே செய்யப்படுகிற பரிசோதனை, இந்தப் பரிசோதனையில் இருப்பது
உசிதமல்ல என்கின்ற விடயத்தை நான் மன்றுக்கு தெரியப்படுத்தி இருக்கிறேன்.

இந்த விடயங்களிலே தெளிவாக நிபுணத்துவம் வாய்ந்தது என்பது மட்டுமல்ல,
அனுபவமுள்ள ஒரு ஆய்வுகூடம் அல்லது பல்கலைக்கழகம் இதைச் செய்வது உசிதம் என்ற
கருத்தையும் நான் முன்வைத்திருக்கின்றேன்.

ஆகவே அது குறித்த தீர்மானம் பின்னர் எடுக்கப்படும்.

எட்டு வாரங்களுக்கு இதனை
ஆய்வு செய்கிற ஒழுங்குகள் விசேடமாக அதற்கான நிதி ஒதுக்கீடுகள் சம்பந்தமான
விடயங்கள் செய்யப்பட வேண்டும் என்கின்ற உத்தரவும் தற்பொழுது
கொடுக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் எதிர்வரும் 20 ஆம் திகதி இந்த இடம் மீள் சுத்தப்படுத்தபடுவதாகவும்
அதற்குப் பின்னர் 22 ஆம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகும் என்றும்
நீதவான் கூறியிருக்கின்றார் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.