யுத்தத்தின் போது படையினரால் கையகப்படுத்தப்பட்ட வடக்கில் விடுவிக்கப்படக்கூடிய அனைத்து காணிகளும் மீண்டும் மக்களிடம் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தின் தொடக்க விழாவில் இன்று (01) பங்கேற்றபோது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
கடற்றொழில் சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், கடற்றொழில் சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கும் வடக்கில் மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குறிப்பிட்டுள்ளார்.
அமைதி மற்றும் நல்லிணக்கம்
முந்தைய அரசாங்கங்கள் போரை எதிர்பார்த்து செயல்பட்டாலும், இந்த நாட்டில் மீண்டும் எந்த வகையான போரும் ஏற்படாத வகையில் நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் பாடுபட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, கடந்த கால யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட வடக்கில் விடுவிக்கப்படக்கூடிய அனைத்து நிலங்களும் மீண்டும் மக்களிடம் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
அத்தியாவசிய வசதிகள்
மேலும், நாட்டைச் சுற்றியுள்ள கடல், தீவுகள் மற்றும் நிலத்தை மக்களுக்காகப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும், அதில் எந்த விதமான பாதிப்புகளையும் அனுமதிக்காது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, வடக்கு மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்தினருக்கு நீர், மின்சாரம், எரிபொருள், குளிர்பதன சேமிப்பு வசதிகள், வலை பதப்படுத்தும் மைய வசதிகள், ஏல மண்டப வசதிகள் மற்றும் வானொலி தொடர்பு மைய வசதிகள் போன்ற அத்தியாவசிய வசதிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக இந்த ஆண்டு அரசாங்கம் ரூ. 298 மில்லியன் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

