நுவரெலியாவில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த மண்தினு பத்மசிறி, அல்லது ‘கெஹெல்பத்தர பத்மே’, இந்தத் தொழிற்சாலையில் ரூ. 04 மில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரமான பிரச்சினை
அத்துடன், நுவரெலியாவில் உள்ள ஒரு வீட்டை போதைப்பொருள் தொழிற்சாலையை நடத்துவதற்கு வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், இதற்காக 2000 கிலோவுக்கும் அதிகமான ரசாயனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

“அவர்கள் இலங்கையில் ஐஸ் போதைப்பொருளை உற்பத்தி செய்துள்ளனர். இது ஒரு தீவிரமான பிரச்சினை. நடந்து வரும் விசாரணைகள் கூடுதல் தகவல்களை வெளிப்படுத்துகின்றன.
இந்த விடயத்தில் இன்னும் ஆழமான விசாரணைகளை நடத்த வேண்டியிருக்கும்,” என்று அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளார்.
அரசியல் தொடர்புகள்
மேலும், விசாரணையில் இந்த பாதாள உலகக் குழு உறுப்பினர்களால் பராமரிக்கப்படும் போலி கடவுச்சீட்டுக்களை பெறுவதற்கு அரசியல் தொடர்புகள், காவல்துறை அதிகாரிகளுடனான தொடர்புகள் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுடனான தொடர்புகள் பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இந்த விபரங்களை உறுதிப்படுத்த மேலும் ஆழமான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, அரச ஊடகமொன்றுக்க வழங்கிய நேர்காணலின் போது மேற்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளார்.

