யாழ்ப்பாண நகரம் நெரிசல் மிக்கதாகவும் நெருக்கடி மிக்கதாகவும் மாறியுள்ள நிலையில் அதற்கு அமைவாக நெடுந்தூர, குறுந்தூர பேருந்துச் சேவைகள் புதிய மற்றும் பழைய
பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்பட வேண்டியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் இயங்குநிலை தொடர்பான கலந்துரையாடல்
யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (14.10.2025) நடைபெற்றது.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், கூட்டத்தின்
நோக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த
ஆளுநர், “யாழ். நகரத்தில் பேருந்து நிலையம், மருத்துவமனை, வர்த்தக நிலையங்கள்
என்பன அமைந்துள்ளன.
அபிவிருத்திக்கு சிக்கல்
இதனால் யாழ். நகரின் எதிர்கால அபிவிருத்தி
நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. ஏனைய மாவட்டங்களிலுள்ள நகரத்தைப்போன்று எமது
நகரைத்தையும் மாற்றுவதற்கு ஒத்துழைக்கவேண்டும்.

எல்லோருக்கும் நகரத்தின்
போக்குவரத்து நெரிசலை குறைக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. எனவே அதை
நோக்கியதாக பேருந்து நிலையத்தின் செயற்பாடுகளை நாம் ஒழுங்குபடுத்தவேண்டும்,
என்றார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினரும், போக்குவரத்து
தொடர்பான செயற்குழுவின் தலைவருமான க.இளங்குமரன், பொதுப்போக்குவரத்தை மக்களின்
தேவைக்கானதாக மாற்றுவதே அரசாங்கத்தின் இலக்கு.
தனியார் மற்றும் இலங்கை
போக்குவரத்துச் சபை என்பன இணைந்து செயற்பட வேண்டும். அதனடிப்படையிலேயே யாழ்.
மாவட்டத்திலும் சேவைகள் நடைபெறவேண்டும் என எதிர்பார்க்கின்றோம்” என்றார்.










