பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவமானது இன்று (23.10.2025) காலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பண்டாரகம, யட்டியன பகுதியைச் சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவன் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பண்டாரகம காவல்துறை பிரிவின் பாணந்துறை – ஹொரணை வீதியில் கொத்தலாவல சந்திக்கு அருகில் உள்ள கிளை வீதியிலிருந்து பிரதான வீதிக்குள் பிரவேசிக்க சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று ஹொரணை நோக்கிச் சென்ற பேருந்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
சடலம் ஹொரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பண்டாரகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

