கார்த்திகையில் மரநடுகை தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவை குளிரச்செய்யும் என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
மரநடுகை மாதத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும்,
பூமி விரைந்து சூடேறி வருவதால் காலநிலையில் படுபாதகமான மாற்றங்கள் ஏற்படத்
தொடங்கியுள்ளன.
அதிவேகத்துடன் நீண்ட நேரம் நின்று தாக்கும் சூறாவளிகள், காலம்
தப்பிக் கொட்டித் தீர்க்கும் அடை மழை, காடுகளில் தீ மூட்டும் கடும் வறட்சி,
உயர்ந்து செல்லும் கடல் மட்டம், உயிரினங்களின் பேரழிவு என்று காலநிலை
மாற்றத்தின் விளைவுகளை நாம் தற்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம்.
பண்பாட்டு மரபு
இதனால்,
வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமான கரியமில வாயுவை உறிஞ்சி அகற்றுவதற்கு
மரங்களின் நடுகையை ஒரு பேரியக்கமாக முன்னெடுக்க வேண்டிய கட்டாய நிலைக்கு நாம்
தள்ளப்பட்டுள்ளோம்.

மரநடுகையைப் பெருமளவில் மேற்கொள்வதற்கு கூடுதலான மழைவீழ்ச்சியைப் பெறும்
கார்த்திகை மிகப்பொருத்தமான மாதமாகும். ஈழத்தமிழர்களின் வாழ்வியலிலும்
கார்த்திகை மாதம் தனித்துவமான இன்னுமொரு சிறப்பினைக் கொண்டுள்ளது.
இம்மாதத்திலேயே மண்ணுக்காக மரணித்த மறவர்களைக் கூட்டாக நினைவிற்கொள்ளும் நாள்
அடங்குகிறது. மரவழிபாட்டைத் தமது ஆதி வழிபாட்டு முறையாகக்கொண்ட தமிழர்கள்,
இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகைசெய்து, அவற்றை உயிருள்ள
நினைவுச்சின்னங்களாகப் போற்றிய பண்பாட்டு மரபைக் கொண்டிருக்கின்றனர்.
உணர்வெழுச்சி
தேசியம் என்பது வெறுமனே தட்டையான ஒர் அரசியற் சொல்லாடல் அல்ல. இது ஒரு
இனத்தின் வாழ்புலம், மொழி, வரலாறு, பண்பாடு, மத நம்பிக்கைகள் ஆகிய கூறுகளின்
திரட்சியான ஒரு வாழ்க்கை
முறையாகும்.

அந்த வகையில், கார்த்திகைமாத மரநடுகை என்பது தமிழ்த்தேசிய
நோக்கிலும் மிகவும் பொருத்தப்பாடான ஒன்றாகும்.
எனவே, தமிழ் மக்கள் கார்த்திகை
மரநடுகையை ஒரு சூழல்பேண் நடவடிக்கையாக மாத்திரமல்லாது உணர்வெழுச்சியுடன் கூடிய
ஒரு தமிழ்த்தேசியச் செயற்பாடாகவும் கொண்டாட வேண்டியது அவசியமாகும் – என்றுள்ளது.

