கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸின் 3 விமானங்கள் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் மற்றும் (Mattala Rajapaksa International Airport) இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க பகுதியில் இன்று (19) காலை நிலவிய கடுமையான பனிமூட்டம் காரணமாக குறித்த விமானங்கள் பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தம்மாம், ரியாத் மற்றும் குவாங்சோவிலிருந்து வருகைதந்த 3 விமானங்களே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடுமையான பனிமூட்டம்
சீனாவின் குவாங்சோவிலிருந்து வந்த சிறிலங்கன் எயார்லைன்ஸ் UL- 881 விமானம் மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து வந்த UL-266 விமானம் ஆகியன மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.
அத்துடன் சவுதி அரேபியாவின் தம்மாமிலிருந்து வந்த சிறிலங்கன் எயார்லைன்ஸ் UL-254 விமானம் இந்தியாவின் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நிலவிய கடுமையான பனிமூட்டம் பார்வைத்திறனைக் குறைத்ததால் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அதிகாரிகள் (Air Traffic Controllers), பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகத் தரை இறங்குவதைத் தற்காலிகமாகத் தடை செய்ய நேரிட்டது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விமானம் தரையிறங்குவதற்கு பாதிப்பாக இருந்த பனிமூட்டமான நிலைமை நீங்கி தற்போது சீரான வானிலை தென்படுவதாக கூறப்படுகின்றது.

