திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாலம்போட்டாறு
கிராம சேவகர் பிரிவில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அப்
பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
குறித்த கிராமத்தில் மாலை வேலையில் யானை ஊருக்குள் புகுந்து பயிர்களை துவம்சம்
செய்து விட்டு செல்வதாக தெரிவிக்கின்றனர்.
மயிரிழையில் உயிர் தப்பிய விவசாயி
பாலம் போட்டாறு,பத்தினிபுரம்,இக்பால் நகர் கிராம மக்களின் அன்றாட தொழிலாக
தோட்டச் செய்கை,விவசாயம் என காணப்படுகிறது.
காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் மேட்டு நிலப் பயிர்கள் உட்பட நெற்
செய்கை விவசாயத்தையும் நாசமாக்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தென்னை,வாழை உட்பட பல பயிரினங்களையும் துவம்சம் செய்துள்ளதாகவும் துவிச்சக்கர
வண்டியில் வந்த விவசாயி ஒருவரை தாக்க முற்பட்ட போது தான் துவிச்சக்கர வண்டியை
விட்டு ஓடியதில் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் தெரிவித்தார்.
ஊருக்குள் படையெடுக்கும் யானைகள்
குறித்த கிராமத்தின் பிரதான வீதியில் யானை வேலி அமைத்தாலும் ஊருக்குள்
படையெடுக்கும் யானைகளை கட்டுப்படுத்தி தங்களது உயிர்களை, உடமைகளை பாதுகாக்க
உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

அத்துடன் பெரும்போக நெற் செய்கை விதைத்து 45 நாட்களை கடந்துள்ள நிலையில்
நெற்பயிர்ச் செய்கையையும் அழித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
உயிர் போன பின்பு தான் வருவார்களா
அழிவுக்கான நஷ்ட
ஈடுகளை கேட்டால் ஒரு ஏக்கருக்கு ரூபா 3000,4000 வரை தருகின்றனர் விதை நெல் ஒரு
ஏக்கருக்காக சுமார் 7000 ரூபாவாக உள்ளது இனியும் எங்களது வாழ்வாதாரத்தை
பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் எனவும் தேர்தல் காலங்களில் மாத்திரம் வரும்
அரசியல்வாதிகள் தற்போது உயிர் போன பின்பு தான் வருவார்களா எனவும் காட்டு
யானைகளின் அச்சுறுத்தலுக்குள்ளான பிரதேச குடியிருப்பாளர்கள் கேள்வி
எழுப்பியுள்ளனர்.

தங்களது பிள்ளைகளை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் பீதியுடன் தூங்க
வேண்டியுள்ளதாவும் பாடசாலைகளுக்கு அனுப்பவும் பயத்துடனான நிலை நிலவுவதாகவும்
தெரிவிக்கின்றனர். காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து உயிர்களை பாதுகாக்க
உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.


